முதல் போர் - பல்லவ மன்னன் மகேந்திர பல்லவனுக்கும், சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசிக்கும் இடையே ஏழாம் நூற்றாண்டில் நடந்தது. புலிகேசி வடக்கே இருந்த வேங்கி நாட்டின் மீது படை எடுத்து வெற்றி பெற்றான். இப்போது அவனின் கண் தெற்கு பகுதியை குறிவைத்தது. தெற்கில் இருப்பது காஞ்சி, பல்லவன் ஆளும் பகுதி. இதைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் பெரும் படை திரட்டி வந்தான் புலிகேசி. காஞ்சியை காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு மகேந்திர பல்லவன் தலையில் விழுந்தது. பல்லவ படைகளை திரட்டுக்கொண்டு அவனும் போருக்கு தயாரானான். இருவரும் காஞ்சிபுரம் அருகே இருக்கும் "புள்ளலூர்" என்ற ஊரில் சந்தித்து போரிட்டனர், பல வீரர்கள் மடிந்தனர், பல யானைகள் இறந்தன, ரத்த ஆறு ஓடியது. இறுதியில் புலிகேசியால் காஞ்சியை கைப்பற்ற முடியவில்லை. ஆனால் பல்லவர்கள் காஞ்சிக்கு வடக்கே இருந்த பகுதிகளை இழந்தனர்.
இரண்டாம் போர் - ஹைதர் அலிக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடந்தது. ஆங்கிலேயர்கள் தோற்று வெளியேறினர், அந்த போரில் இறந்த இரு ஆங்கிலேய தளபதிகளின் சமாதிகள் இன்றும் அந்த ஊரில் கேட்பாரற்று கிடக்கிறது!
ஏதேர்சையாக பேசிக்கொண்டிருக்கும் போது உங்கள் பின்னே ஒரு யானை வந்து நின்றால் அதை எப்படி பார்ப்பீர்கள் ஒரு பக்கம் பயம், இன்னொரு பக்கம் அதன் பிரமாண்டம், அடுத்து அதன் வலிமை, கம்பீரம் என பல விஷயங்கள் நம்மை பயமுறுத்த துவங்கும். ஆம், அது ஒரு யானை, ஒரு யானை இரண்டு யானை அல்ல நூறு யானைகள் சேர்ந்து வந்து எங்களுக்கு பின் ஒன்றன் முதுகின் மீது ஒன்றாக நின்றுகொண்டிருப்பதை போன்று தோன்றியது.
அருகே சென்று பார்த்தோம் சுற்றி முட்புதர்கள், கோயிலுக்கு மேலே செடி கொடிகள். இது எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை. ஒரே ஒரு விஷயம் மட்டுமே யோசித்தோம்! இது எப்படி முடிந்தது! ஒரு வேளை தஞ்சை கோயிலின் மாதிரியை செங்கலில் இங்கு செய்து பழகினார்களா? அதே போன்று உள்ளதே! இதை யார் கட்டியது? எந்த காலத்தை சேர்ந்த கோயில்? பல்லவர்களுடையதா? அப்படி இருப்பின் ஆயிரத்து இருநூறு வருடங்கள்! இல்லை விஜயநகர மன்னர்கள் கட்டியதா அப்படி இருப்பின் 500 வருடங்கள் கடந்தது. எதுவாக இருந்தால் என்ன, ஒரு செங்கல் இத்தனை வருடம் நின்றுகொண்டுள்ளதென்றால் உலக அதிசப் பட்டியலில் அல்லவே இதை சேர்க்க வேண்டும்? உள்ளேயும் விமானம் தஞ்சை கோயிலை போன்று இருக்குமா? உள்ளே சென்று மூலவர் இருக்கும் இடத்தில் இருந்து பார்த்தோம். ஆம், அதே தான் 100% தஞ்சை கோயிலின் விமானமும் இப்படி தான் இருக்கும், உள்ளே எதுவும் இருக்காது, கற்களை நெருக்கிக்கொண்டே சென்று முடித்திருப்பார்கள், இங்கும் அது தான் நடந்துள்ளது. பிரமாண்டம்! ஒரு செங்கல் கோயில் இத்தனை வருடம் எப்படி கடந்தது! கடவுளே நீ தான் பதில் சொல்ல வேண்டும்.
இவை அனைத்தையும் விட ஆச்சர்யமான விஷயம் கோயில் கற்கள் இல்லாத அடிபாகத்தில் நின்றுகொண்டுள்ளது! இதன் கீழிருந்த கற்களை எடுத்துச் சென்றுவிட்டார்களா அல்லது கரைந்து விட்டதா தெரியவில்லை! ஆனால் அடிபாகக் கற்கள் துணை இல்லாமல் இவ்வளவு உயர கோயில் இன்றும் நின்று கொண்டுள்ளது, இது பைசா கோபுரத்தை விட அதிசயமான ஒன்று!
கருவறையை சுற்றி அழிந்த நிலையில் சுதை ஓவியங்களை காண முடிந்தது, எப்படியும் 500 வருடங்கள் கடந்த ஓவியங்களாக இருக்கும். கருவறைக்குள் தெய்வம் இல்லை ! கோயில் வழிபாட்டில் இல்லை !! இந்த கொடுமை எல்லாம் நம் நாட்டில் மட்டும் தான் நடக்கும். வெளிநாட்டில் இருந்திருந்தால் இதற்க்கு மதிப்பே வேறு! நண்பர் விஜய் தன்னடைய Poetry in Stone கூறியுள்ளதை போல் முதிர்ந்த போர் வீரரை போல, வீரத்தழும்புகள் பல உடலில் ஏந்தி இருந்தாலும், தலை சற்றும் சாயாமல் நேசி நிமிர்த்தி விண்ணோக்கி சென்ற ஆறு தளங்கள் உடைய அற்புத செங்கல் விமானம். அவ்வூர் மக்கள் இந்த கோயிலை புறக்கணித்தாலும், கோயில் அந்த மக்களை புறக்கணிக்க வில்லை, இத்தனை சேதங்களுக்கு பின்னும், அனைத்து அடிகளையும் தாங்கிக்கொண்டு நான் உங்கள் ஊரில் பிறந்தவன், உங்கள் ஊரில் வளர்ந்தவன் உங்களை விட்டு பிரியமாட்டேன் என்று இன்றும் கம்பீரமாக நின்றுகொண்டுள்ளது !!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.