Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: கோவளம் கடற்கரை கேரளா - சுற்றுலா - Kovalam beach kerala - tourism
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள பிரபலமான கடற்கரை சுற்றுலாத்தலம் இந்த ‘ கோவளம் ’ ஆகும். பல வரலாற்று பயணங்கள...

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள பிரபலமான கடற்கரை சுற்றுலாத்தலம் இந்த கோவளம்ஆகும். பல வரலாற்று பயணங்களின் சாட்சியாய் பரந்து விரிந்திருக்கும் அரபிக்கடலை ஒட்டி இந்த ஸ்தலம் அமைந்துள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து 16கி.மீ தூரத்தில் உள்ள, எழில் நிறைந்த இந்த சுற்றுலாத்தலத்துக்கு மிக சுலபமாக சென்றடையலாம்.
கோவளம் எனும் பெயருக்கு மலையாள மொழியில் தென்னந்தோப்பு பகுதிஎன்பது பொருளாகும். பெயருக்கேற்றப்படியே இக்கடற்கரைப்பகுதியில் ஏராளமான தென்னந்தோப்புகள் காணப்படுகின்றன. எப்படி காஷ்மீர் பகுதியானது ஒரு சொர்க்கபூமியென்று அழைக்கப்படுகிறதோ அதைப்போலவே இந்த கோவளம் கடற்கரையும் தெற்கிலுள்ள ஒரு சொர்க்கபுரியாக புகழ்பெற்றுள்ளது.

கோவளத்தின் பாரம்பரிய பின்னணி
கோவளத்தின் சுவாரசியமான வரலாற்றுப்பின்னணி மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு இங்கு அதிக அளவில் வரலாற்று ஆர்வலர்கள் விஜயம் செய்கின்றனர்.
1920ம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தான ராணியான சேது லட்சுமி பாய் இங்கு தனக்காக ஒரு பிரத்யேக ஓய்வு மாளிகையை நிர்மாணித்த பிறகே இது வெளி உலகுக்கு தெரிய ஆரம்பித்ததாக சொல்லப்படுகிறது. ஹால்சியோன் கேஸ்சில்என்று அழைக்கப்படும் அந்த ஓய்வு மாளிகையை இன்றும் கோவளத்தில் பயணிகள் பார்க்கலாம்.
ராணியாருக்குப்பின் அவரது பரம்பரை வழித்தோன்றலான திருவாங்கூர் மஹாராஜா ஒருவர் இந்த கடற்கரை ஸ்தலத்துக்கு அடிக்கடி விஜயம் செய்ததுடன் உள்ளூர் கலை அம்சங்கள் மற்றும் கைவினைப்பொருள் தயாரிப்பு போன்றவற்றை ஊக்குவிக்கும் கலாரசிக வள்ளலாகவும் திகழ்ந்துள்ளார்.

இருப்பினும் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு வருகை தந்த ஐரோப்பிய விருந்தினர்கள் விரும்பி விஜயம் செய்ய ஆரம்பித்தபின் இந்த கடற்கரை ஸ்தலம் இன்னும் பிரபல்யமடைய ஆரம்பித்தது.1930ம் ஆண்டுக்குள் இது ஐரோப்பிய நாடுகளிலிருந்து விஜயம் செய்யும் பயணிகளிடையே பிரசித்தமான கடற்கரை ஸ்தலமாக மாறிவிட்டது.
பின்னாளில் 1970ம் ஆண்டுகளில் கோவளம் திரும்பவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது அக்கால கட்டத்தில் உருவாகியிருந்த ஹிப்பி கலாச்சாரத்தை சேர்ந்த குழுவினர் கோவளத்தை தங்கள் பிரதான கேந்திரமாக ஆக்கிக்கொண்டுவிட்டனர்.

ஸ்ரீலங்கா வரை நீண்ட ஹிப்பி பயணிகளின் பாதையில் இந்த கோவளம் ஒரு முக்கிய இருப்பு ஸ்தலமாக அமைந்துவிட்டது. ஆகவே, இது போன்ற வெளிப்பயணிகளின் ஆக்கிரமிப்பானது ஒரு மௌனமான கடற்கரை கிராமத்தை திடீரென்று திருவிழா நகரம்போன்று மாற்றிவிட்டது. வருடாந்திரமாக நிறைவேற்றவேண்டிய ஒரு சடங்கு போன்று கோவளம் ஸ்தலத்திற்கு விஜயம் செய்யும் ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய பயணிகளை இன்றும் கோவளத்தில் பார்க்கலாம்.
ரம்மியமான கடற்கரைகளின் நகரம்
கோவளம் நகரத்தின் பிரதான கவர்ச்சி அம்சம் அதன் அழகிய கடற்கரைகளாகும். அலைகள் வீசும் கடலை ரசித்தபடியே இதமான மணற்பகுதியில் நடக்கும் அனுபவம் வாழ்வில் ஒருமுறையாவது அனுபவிக்க வேண்டிய ஒன்றாகும்.
அபூர்வ அழகின் தரிசனம் ஆயுள் வரை ஆனந்தம்எனும் பழமொழியின் பொருளை கோவளம் சென்று திரும்பும்போது நீங்கள் புரிந்துகொள்வீர்கள். கோவளத்தின் பசுமையும், மணற்பரப்பும், நீலக்கடலின் சாந்தமும் உங்கள் கவலைகளை எல்லாம் மறக்க வைத்து விவரிக்க முடியா பரவசத்தில் மிதக்க வைக்கும்.

கோவளத்தில் மூன்று முக்கியமான கடற்கரைகள் (பீச்சுகள்) உள்ளன. இவற்றின் அழகை ரசிப்பதற்கு காலை நேரம் மற்றும் மாலை நேரம் இரண்டும் ஏற்ற நேரங்களாகும்.
இச்சமயங்களில் சூரியன் எழும்பி வரும் காட்சி மற்றும் சூரிய அஸ்தமனம் போன்றவற்றின் அற்புத தரிசனங்கள் காணக்கிடைக்கின்றன. கோவளம் கடற்கரையின் மற்றொரு சுவாரசியமான அம்சம் இங்குள்ள மணல் சற்றே கருப்பு நிறத்தில் காணப்படுவதாகும். மோனசைட் மற்றும் லைம்னைட் எனும் கனிமப்பொருட்கள் இம்மணலில் நிறைந்திருப்பதே இதற்கு காரணம்.

இங்குள்ள மூன்று முக்கியமான கடற்கரைகளும் அடுத்தடுத்து 17கி.மீ நீளத்துக்கு கடலை ஒட்டி காணப்படுகின்றன. கடினமான பாறை அமைப்புகள் இம்மூன்று கடற்கரைகளையும் பிரிப்பதுபோல் அமைந்துள்ளன.
இந்த பாறை அமைப்புளைக் கடந்து அடுத்த கடற்கரைக்கு செல்லும்போது மிகுந்த கவனம் தேவை. இவை வழுக்கும் தன்மையை கொண்டுள்ளதால் மிகுந்த ஆபத்தானவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

லைட் ஹவுஸ் பீச், ஹவா பீச் மற்றும் சமுத்ரா பீச் என்று இந்த மூன்று கடற்கரைகளும் அழைக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தன்மையான அழகுடன் காட்சியளிப்பதால் கோவளம் வரும்போது ஒவ்வொன்றுக்கும் நேரம் ஒதுக்கி திட்டமிட்டு விஜயம் செய்வது அவசியம்.

கோவளத்திலுள்ள மூன்று கடற்கரைகளில் பெரியது லைட் ஹவுஸ் பீச் என்றழைக்கப்படும் கடற்கரையாகும். இங்குள்ள குரும்கல் எனும் குன்றின்மீது 35 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள லைட் ஹவுஸ் காரணமாக இக்கடற்கரைக்கு இந்த பெயர் வந்துள்ளது.
இரண்டாவது பெரிய கடற்கரையான ஹவா பீச் பகுதியில் ஒருகாலத்தில் பெண் பயணிகள் மேலாடையின்றி சூரியக்குளியலில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்ததால் ஹவா பீச்என்ற பெயரைப் பெற்றுள்ளது. பொதுவாக ஐரோப்பிய பெண்பயணிகள் மட்டுமே இது போன்ற சூரியக்குளியலில் ஈடுபடுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்றொரு சுவாரசியமான தகவலாக இந்தியாவிலேயே முதன்முதலாக இதுபோன்ற சூரியக்குளியல் கலாச்சாரம் கோவளத்தில் மட்டுமே காணப்பட்டது என்பதை சொல்லலாம்.
இருப்பினும் தற்போது இத்தகைய மேலாடையற்ற சூரியக்குளியல்கள் கோவளம் கடற்கரைகளில் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், தனியார் ரிசார்ட் நிறுவனங்கள் இத்தகைய சூரியக்குளியல் மற்றும் பீச் குளியல்களில் பயணிகள் ஈடுபடுவதை அனுமதிக்கின்றன.

இந்த ரிசார்ட் வளாகங்களில் பொது மக்களுக்கு அனுமதியில்லை. குறிப்பாக, லைட் ஹவுஸ் பீச் மற்றும் ஹவா பீச் ஆகிய இரண்டு மட்டுமே அதிக அளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கின்றன. கோவளம் சுற்றுலாத்தலத்தின் வடக்கு திசையில் சமுத்ரா பீச் அமைந்துள்ளது. எளிமையான சமுத்ரா எனும் பெயர் ஆரம்ப நாட்களில் இந்த கடற்கரைக்கு விஜயம் செய்த பயணிகளால் வைக்கப்பட்டு அதுவே நிலைத்துவிட்டது. இருப்பினும் மற்ற இரண்டு கடற்கரைகளைப்போன்று இங்கு அதிகமான சுற்றுலாப்பயணிகளின் நடமாட்டம் இல்லை. எனவே, இப்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருப்பதை காணலாம்.

இந்த மூன்று கடற்கரைகளைத் தவிர்த்து மற்றொரு கடற்கரையையும் கோவளம் சுற்றுலாத்தலம் கொண்டுள்ளது. அது அஷோகா பீச் என்றழைக்கப்படும் கடற்கரையாகும்.
சமுத்ரா பீச் போன்றே இங்கும் அதிகம் சுற்றுலாப்பயணிகள் வருவதில்லை. தனிமையை நாடி வரும் தேனிலவுத்தம்பதியினர் இக்கடற்கரைப் பகுதிக்கு வந்து உலாவுவதை விரும்புகின்றனர்.

கோவளம் சுற்றுலாத்தலத்திற்கு செப்டம்பர் மாதம் முதல் மே மாதம் வரையிலான பருவத்தில் விஜயம் செய்வதை பயணிகள் விரும்புகின்றனர்.

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top