Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: பார்ப்பான்/ பிராமணன்/ அந்தணன் என்போர் யார்????
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
அறவழி நின்று இறையுடன் இரண்டறச் சோதியுடன் கலந்து முற்றுப்பெற்ற சித்தர்களே (ஞானிகளே) அந்தணர் / பிராமணர் ஆவர். பிரம்மத்தை அடைந்தவனே பிராமணன்...
அறவழி நின்று இறையுடன் இரண்டறச் சோதியுடன் கலந்து முற்றுப்பெற்ற சித்தர்களே (ஞானிகளே) அந்தணர் / பிராமணர் ஆவர். பிரம்மத்தை அடைந்தவனே பிராமணன். பிறப்பால் மனிதர்கள் எவருமே பிராமணன் (அந்தணன்) ஆகமுடியாது. அவ்வாறு ஞான மார்க்கத்தில் முற்றுப்பெறாமல் தன்னைப் பிராமணன் என அழைப்பவனை பார்ப்பான் என்கிறார் முற்றுப்பெற்ற சித்தபெருமான் திருமூலர்.

"பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்

போர் கொண்ட நாட்டுக்குப் பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே
சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே."
-
ஆசான் திருமூலர்

தம் பெயரில் மட்டுமே(பிறப்பால்) பார்ப்பான்/ பிராமணன்/ அந்தணன் என்போர் எம்பிரானை அர்ச்சனை செய்யத் தகுதியற்றவர்கள். அப்படி அவர்கள் செய்தால் அந்த நாட்டுக்கும், அரசனுக்கும் தாங்கொணா வேதனைகளும், நாட்டு மக்களுக்கும் பொல்லாத வியாதிகளும், பஞ்சமும் வந்துசேரும் என்பதை தன்னாசானான சித்தபெருமான் நந்தீசர் உரைத்ததாகக் கூறுகிறார் ஆசான் திருமூலர். இதன் மூலம் ஆசான் திருமூலர் சொல்வது பிறப்பால் / பெயரால் யாரும் இறையை அர்ச்சிக்கும் தகுதியைப் பெறமாட்டார். மெய்யாக அறவழியில் நிற்கும் அனைவருக்கும் இறையை அர்ச்சிக்கும்(பூசிக்கும்) தகுதியுண்டு. அவர்களே ஈற்றில் இறையுடன் இரண்டறக் கலக்க வல்ல 'அறவாழி அந்தணர்' (சித்தர்/ஞானிகள்) ஆவார்கள். 

"
சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
ஒத்த விடயம்விட் டோரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன்உண்மை யுமின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே. "
-
ஆசான் திருமூலர்-

சத்தியம், ஞானம், இறையுணர்வு, இறையன்பு எதுவுமே இருக்காது. ஆனால், தம்மைத் தாமே உயர்ந்த பிராமணர் என்போர் பித்தேறிய மூடரேயன்றி பிராமணராகார் என்கிறார் ஆசான் திருமூலர். இது பிறப்பில் தாமே பிராமணர் என்றும், வார்த்தையில் மட்டும் எல்லாவுயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதாகக் கூறிச் சகமனிதரையே தீண்டத்தகாதவர் எனக் கூறி உலகை ஏமாற்றும் பித்தேறிய மூடருக்காகக் கூறப்பட்டுள்ளது.

சாதி, மத பேதமின்றி எல்லா உயிர்களிடத்தும் அன்பு பூண்டு, அறநெறிப்படி வாழ்ந்து, பரப்பிரம்மத்தை (இறையை) பரிபூரணமாக உணர்ந்து, அருட்பெருஞ்சோதியுடன் இரண்டறக் கலந்த அனைவரும் பிராமணர்கள்தான். அவர்களது உள்ளம்தான் எம்பெருமான் களிநடம் புரியும் உன்னத அரங்கம் என்று அருட்பெருஞ்சோதி வள்ளலார் பெருமான் பகர்ந்துள்ளார்.

பிறவாநெறி (சகாக்கல்வி / மரணமில்லாப் பெருவாழ்வு) அறிந்த ஆசான் திருமூலரின் குருவாகிய ஆசான் நந்தீசர் போன்ற, ஆதியாகிய இறையுடன் இரண்டறக் கலந்த ஞானிகள்/ சித்தர்களே 'அறவாழி அந்தணர்கள்' ஆவார்கள்.

"
பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன்
உறவாகி வந்தென் உளம்புகுந் தானே."
-
ஆசான் திருமூலர்-

வாழ்க வையகம் ! 
வளர்க அன்பு !

ஆசான் திருமூலர் திருவடிகள் போற்றி. 


About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top