Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: † இன்றைய புனிதர் † (Saint of the Day) (மார்ச்/ March 8) ✠ புனிதர் கடவுளின் ஜான் ✠ (St. John of God)
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
  † இன்றைய புனிதர் † (Saint of the Day) ( மார்ச் / March 8) ✠ புனிதர் கடவுளின் ஜான் ✠  (St. John of God) பிறப்பு : 8 மார்ச் ...
 
இன்றைய புனிதர் † (Saint of the Day) (மார்ச்/ March 8)
புனிதர் கடவுளின் ஜான் ✠ (St. John of God)
பிறப்பு: 8 மார்ச் 1495  மோண்டேமோர்--நோவோ, போர்ச்சுகல் 
(Montemor-o-Novo, Évora, Portugal)
இறப்பு : 8 மார்ச் 1550 (வயது 55) கிரனடா, ஸ்பெயின் (Granada, Spain)
அருளாளர் பட்டம் : செப்டம்பர் 21, 1630 திருத்தந்தை எட்டாவது அர்பன் 
(Pope Urban VIII)
புனிதர் பட்டம் : அக்டோபர் 16, 1690 திருத்தந்தை எட்டாவது அலெக்சாண்டர் 
(Pope Alexander VIII)
நினைவுத் திருநாள் : மார்ச்
முக்கிய திருத்தலம்"புனிதர் கடவுளின் ஜான்" பேராலயம், கிரனடா, ஸ்பெயின்
(Basilica of St. John of God, Granada, Spain)
பாதுகாவல் :  புத்தக வியாபாரிகள், மன நோயாளிகள், மருத்துவமனைகள், செவிலியர்கள், இறப்போர்
"ஜோவாவோ டுவார்ட் சிடாடே" (João Duarte Cidade) எனும் இயற்பெயர் கொண்ட 'புனிதர் கடவுளின் ஜான்' போர்ச்சுகல் நாட்டில் பிறந்து ஒரு போர் வீரனாக தமது வாழ்வைத் தொடங்கிய இவர், பின்னாளில், ஸ்பெயின் நாட்டின் ஒரு மருத்துவ பணியாளராக மாறிப் போனார். இவரைப் பின்பற்றியவர்கள், பிற்காலத்தில் உலகளாவிய மன நோயாளிகளைப் பராமரிப்பதற்கான "கடவுளின் ஜானின் சகோதர மருத்துவ பணியகங்கள்" (Brothers Hospitallers of Saint John of God) எனும் உலகளாவிய கத்தோலிக்க நிறுவனத்தை தொடங்கினர். அது, மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஏழைகள் மற்றும் நோயாளிகளின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது.
போர்ச்சுகல் நாட்டிலுள்ள "மோண்டேமோர்--நோவோ" எனும் இடத்தில் 8 மார்ச் 1495ல் பிறந்த இவரின் தந்தை பெயர், "ஆண்ட்ரே சிடாடே" (André Cidade) ஆகும். தாயாரின் பெயர், "தெரெசா டுவார்ட்" (Teresa Duarte) ஆகும்.
இவருக்கு எட்டு வயது நடக்கும்போது ஒருநாள், இவர் வீட்டிலிருந்து காணாமல் போனார். யாராவது சிறுவனை வேண்டுமென்றே கடத்திவிட்டார்களா, அல்லது தமது வீட்டில் விருந்தினராக இருந்த மத குரு ஒருவரே சிறுவனை மயக்கி அழைத்துச் சென்றுவிட்டாரா என்று கவலைப்பட்டனர் பெற்றோர். தாங்கொணா கவலையால் வாடிய அவரது தாயார் விரைவிலேயே மரித்துப்போனார். அவரது தந்தையாரும் ஃபிரான்சிஸ்கன் சபையில் (Franciscan Order) இணைந்துவிட்டார்.
சிறுவன் சிடாடே, ஸ்பெயின் (Spain) நாட்டின் "டோலேடோ" (Toledo) நகரின் அருகேயுள்ள "ஒரொபெசா" (Oropesa) என்னுமிடத்தின் தெருக்களில் வீடற்ற, அனாதைச் சிறுவனாக சுற்றிக்கொண்டிருந்தார். ஊர் பெயர் அறியாத வெளி நாடொன்றில், தங்குவதற்கு இடமில்லாமலும், உண்பதற்கென்று உணவொன்றும் இல்லாமலும், உதவுவதற்கும் யாருமில்லாமலும் தவித்தார் சிடாடே. இறுதியில், "ஃபிரான்சிஸ்கோ மயோரல்" (Francisco Mayoral) என்ற விவசாயி சிறுவனுக்கு உதவ முன்வந்தார். சிறுவனுக்கு புகலிடம் தந்த அவர், சிறுவனுக்கு கிராமமொன்றில் கால்நடைகளை மேய்க்கும் பணி தந்தார்.
சுமார் பதினான்கு வருடங்கள் அங்கே பணிபுரிந்த சிடாடேயின் வலிமை, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றால் கவரப்பட்ட விவசாயி, தமது மகளை சிடாடேவுக்கே மணமுடித்துக் கொடுத்து தமது வாரிசாக வைத்துக்கொள்ள விரும்பினார். அவர் தமது இவ்விருப்பத்தை தொடர்ந்து சிடாடேவிடம் வலியுறுத்தி வந்தார். 22 வயதான சிடாடே, விவசாயியின் நல்லெண்ணத்தை உணர்ந்தாலும், அவரது பெண்ணுடன் திருமணத்திற்கு சம்மதிக்க அவருக்கு மனம் ஒப்பவில்லை.
தருணம் பார்த்து காத்திருந்த சிடாடே, "ரோமப் பேரரசன்" (Roman Emperor) "ஐந்தாம் சார்ளசின்" (Charles V) இராணுவத்தின் காலாட்படைப் பிரிவொன்றில் சேர்ந்து ஃபிரெஞ்ச் படைகளுக்கு எதிராக போர் புரிய சென்றார். காலாட்படைப் பிரிவில் பணிபுரிகையில் ஒருமுறை, கொள்ளையடிக்கப்பட்டிருந்த பெரும் தொகையான பணம் மற்றும் பொருட்களுக்கு காவலிருக்க சிடாடே பணிக்கப்பட்டிருந்தார். சிடாடே அந்த காவல் பணியிலிருந்து மாற்றப்படும் வேளையில் மொத்த பொருட்களும் பணமும் கொள்ளை போனது. இயற்கையாகவே சிடாடே மீது அனைவருக்கும் சந்தேகம் வந்தது. உண்மையிலேயே அவர் அதில் சம்பந்தப்படாவிடினும், விசாரணையின் இறுதியில் பணியில் கவனமின்றி இருந்த குற்றத்துக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும் அவரது விதியானது, வேறொரு பொறுமைசாலியான இராணுவ அதிகாரி ரூபத்தில் வந்தது. மீண்டும் விசாரணை நடத்தி, அவருக்கு மன்னிப்பு வழங்கினார்.


சிடாடே "ஒரொபெசா" (Oropesa) பண்ணைக்கே திரும்பினார். மீண்டும் சுமார் நான்கு ஆண்டுகள் பழைய, கால்நடைகளை மேய்க்கும் பணியைச் செய்தார்.
பின்னர், துருக்கி நாட்டுக்கு எதிராக போர் புரிய ஹங்கேரி சென்றுகொண்டிருந்த இராணுவப் படைகளுடன் இணைந்து சென்றார். சிடாடே சுமார் பதினெட்டு வருடங்கள் ஐரோப்பிய நாடுகளெங்கும் இராணுவ பணிபுரிந்தார்.
இதுவரை தாம் வாழ்ந்த வாழ்க்கையில் பூரண திருப்தி காணாத சிடாடே, ஒரு தியாக வாழ்வு வாழவேண்டுமென விரும்பினார். ஆபிரிக்கா சென்று அங்கே அடிமைகளாக வாழும் கிறிஸ்தவர்களின் விடுதலைக்காக உழைக்க எண்ணினார். "மொரோக்கோ" (Morocco) நாட்டின் வடக்கு கடற்கரைப் பிரதேசமான போர்ச்சுகீசிய காலனியான "சியோட்டா" (Ceuta) சென்றார். அங்கேயுள்ள ஃபிரான்சிஸ்கன் துறவு மடம்" (Franciscan Friary) சென்று தமது ஆன்மீக விருப்பத்தினை கூறினார். ஆனால் அங்கிருந்த துறவியரோ, ஆபிரிக்காவில் அவரது ஆன்மீக வளர்ச்சி முழுமையடையாது என்றும் ஸ்பெயின் திரும்புமாறும் அறிவுறுத்தினர்.
ஸ்பெயின் நாட்டின் "கிப்ரால்ட்டர்" (Gibraltar) சென்று சேர்ந்த சிடாடே, இறைவன் தம்மில் காண விரும்புவதை அறியும் பொருட்டு "அண்டலூசியா" (Andalusia) பிராந்தியம் முழுதும் சுற்றித் திரிந்தார். இவர், தம்மை இறைவன் இறைபணியை ஆற்ற அழைப்பதாக உணர்ந்தார். இந்த கால கட்டத்தில்தான் சிடாடே'வுக்கு குழந்தை இயேசுவின் தரிசனம் கிட்டியது என்பர். அதன் காரணமாகவே பின்னாளில் இவருக்கு "கடவுளின் ஜான்" (John of God) என்ற பெயர் வழங்கலாயிற்று. இறைவன் அவரை "கிரனடா" (Granada) நகர் சென்று பணி புரிய அறிவுறுத்தினார். அதன்படியே "கிரனடா" சென்ற சிடாடே, அங்கேயே தங்கினார்.
1537ம் ஆண்டு, "புனிதர் செபஸ்தியான்" அவர்களின் (Saint Sebastian's Day) நினைவுத் திருநாளான ஜனவரி மாதம் 20ம் நாள், சிடாடே தலையாய மறை போதகரான "அவிலாவின் ஜான்" (John of Ávila) ஆற்றிய மறையுரையைக் கேட்டார். அதனால் ஈர்க்கப்பட்டார். 42 வயதான சிடாடே, அதுவரை தமது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுக்காக வருந்தினார். திடீரென அவர் மனநலம் பாதிக்கப்பட்டார். பொது இடங்களில் தம்மைத்தானே அடித்துக்கொண்டார். கருணை வேண்டினார். தமது கடந்த கால வாழ்க்கைக்காக பரவலாக மன்னிப்பு வேண்டினார். மக்கள் அவரைப் பிடித்து அங்கிருந்த அரசு மன நோயாளிகளுக்கான மருத்துவமனையில் சேர்த்தனர். முதல் நாள் சிகிச்சையில், அவர் அங்கே சங்கிலியால் கட்டப்பட்டார். தனிமையில் அடைத்து வைக்கப்பட்டார். சாட்டையால் அடிக்கப்பட்டார். பட்டினி போடப்பட்டார்.
அவரைக் காண "அவிலாவின் ஜான்" (John of Avila) வந்தார். அவர், "சொந்த கஷ்டங்களைப் பெரிது படுத்தாமல் பிறருக்கு உதவ மென்மேலும் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்" என்று அறிவுறுத்தினார். சிடாடே, தமது இருதயத்திற்கு சமாதானம் கிட்டியதாக உணர்ந்தார். அவரது ஆன்மீக தேடல் இங்கே முடிவுக்கு வந்தது. ஏழை மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதில் உதவுமாறு அறிவுறுத்தப்பட்டார். பின்னாளில் அவிலாவின் ஜான் இவரது ஆன்மீக வழிகாட்டியாக விளங்கினார்.
மருத்துவமனையை விட்டு வெளியே வந்த சிடாடே, ஏழை மக்களினிடையே பணி புரிய தொடங்கினார். இதனிடையே சிடாடே "குவாதுலபே மரியன்னையின்" (Our Lady of Guadalupe) திருத்தலத்திற்கு திருப்பயணம் மேற்கொண்டார். அங்கே தீவிர செபத்தின்பின்னர், அன்னையின் தரிசனம் கிட்டியதாகவும் அன்னை அவரை இன்னும் தீவிரமாக ஏழை மக்களுக்கான பணிகளைச் செய்யுமாறு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகின்றது. இதன்பின்னர் சிடாடே தமது பணிகளை தீவிரப்படுத்தினார். மருத்துவமனைகளை கட்டி எழுப்பினார். செவிலியர் கல்வியை ஸ்பெயினில் அறிமுகப்படுத்தினார். மருத்துவமனைகளுக்குச் சென்று மனநோயால் துன்பப்படும் மக்களிடம் மணிக்கணக்கில் அமர்ந்து உரையாடி ஆறுதல் வழங்கினார். "மருத்துவ பணியாளர்கள்" (Order of Hospitallers) என்ற அமைப்பினை ஏற்படுத்தினார். பின்னாளில் அது, 1572ல் "கடவுளின் ஜானின் மருத்துவப் பணியாளர் சகோதரர்கள்" (Brothers Hospitallers of Saint John of God) என்ற பெயரில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
துன்பங்களிலிருந்து வெளியேறி நலமான வாழ்வை வாழ வழிகாட்டினார். ஊர் ஊராகச் சென்று நோயாளிகளை கவனித்தார். மறைப்பணி மற்றும் மருத்துவ பணியாற்றும்போது எண்ணற்ற வேதனைகளை அனுபவித்தார்.

கடவுளின் ஜான், தாம் பிறந்த அதே நாளான மார்ச் எட்டாம் தேதி, தமது ஐம்பத்தைந்தாம் வயதில் மரணமடைந்தார்.

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top