Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: குமரி மாவட்டம் பிறந்த நாள் இன்று (01/11/1956)
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
இந்தியாவின் தென்னெல்லையான கன்னியாகுமரி முக்கடல் சூழ்ந்த மாவட்டமாகும். மா, பலா, வாழை என முக்கனிகள் மட்டுமின்றிப் பனை, உயர் தர ரப்பர், ஏல...

இந்தியாவின் தென்னெல்லையான கன்னியாகுமரி முக்கடல் சூழ்ந்த மாவட்டமாகும். மா, பலா, வாழை என முக்கனிகள் மட்டுமின்றிப் பனை, உயர் தர ரப்பர், ஏலம், கிராம்பு முந்திரி முதலான பணப்பயிர்களும் விளையும் மாவட்டம்; நெல் உற்பத்தியில் முன்னணியில் இருந்ததால் திருவாங்கூரின் களஞ்சியம் எனப் போற்றப்பட்ட -- நன்செய்யும் புன்செய்யும் நிறைந்து மலையும் காடுகளும் கவிந்து ஒழுகும் இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டம்;
கல்வி அறிவில் முன்னிலையில் நிற்கும் மாவட்டம்; காற்றாலை மின் உற்பத்தியில் முதன்மை இடம் பிடித்த மாவட்டம்; அரிய வகை கனிம வளமான இல்மனைட் மோனோஸைட் பெருமளவில் கிடைக்கும் மாவட்டம்; தமிழ்நாட்டின் மொத்த ரப்பர் உற்பத்தியில் 95 % தரும் மாவட்டம் எனப் பல பெருமைகளைப் பெற்றது கன்னியாகுமரி மாவட்டம். இம்மாவட்டம் திருவாங்கூர் மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.
திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்தின் ஆளுகையில் இருந்த குமரி மாவட்டம், செங்கோட்டை தாலுகா கடந்த 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி தாய் தமிழகத்துடன் இணைந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை, நெய்யாற்றின்கரை, தேவிகுளம், பீர்மேடு, சித்தூர் ஆகிய ஒன்பது தாலுகாக்களில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு, கல்குளம் ஆகிய நான்கு தாலுகாக்கள் இணைந்து குமரி மாவட்டம் உதயமானது. இதில் செங்கோட்டை தாலுகா திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. ஆனால் இந்த ஒன்பது தாலுகாக்களையும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்பதற்காக நாகர்கோவிலில் 'திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்' என்ற அமைப்பு 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தான தமிழ் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டம் தீவிரமடைந்தபோது இதனை ஒடுக்க அரசு அடக்குமுறையை கையாண்டது. இந்நிலையில் 1954ம் ஆண்டு போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதனையடுத்து தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறிய மார்ஷல் நேசமணி, ரசாக், சிதம்பரநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். புதுக்கடையில் 1954ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி துப்பாக்கிச் சூடு நடந்தது. இச்சம்பவத்தில் அருளப்பநாடார், முத்துசுவாமி, செல்லப்பாபிள்ளை, பீர்முகமது ஆகியோர் உயிரிழந்தனர். போராட்டம் ஓயவில்லை என்பதை உணர்ந்த அரசு அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டை தாலுகாக்களை 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி தமிழகத்துடன் இணைத்தது. அன்று தமிழக முதல்வராக இருந்த காமராஜர் தலைமையில் நாகர்கோவில் எஸ்.எல்.பி., மேல்நிலைப்பள்ளியில் இதற்கான விழா நடந்தது.



திருவிதாங்கூர் ஆட்சியின் கீழிருந்த கன்னியாகுமரி மாவட்டம் 1956 நவம்பர் ஒன்றில் தமிழ்நாட்டோடு இணைந்து 58 ஆவது வருடம் இன்று பிறந்துள்ளது. ஆனால் 58 ஆண்டுகள் ஆகியும் கன்னியாகுமரி மாவட்டம் இன்றுவரை தமிழ்நாட்டு ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டே வருகிறது.
நெல்லை நமது எல்லை; குமரி ஒரு தொல்லை என முன்னர் கருணாநிதி சொன்னார். குமரியை ஒதுக்கியே வைத்துள்ளதற்கு அவரின் இந்த வாக்குமூலமே சான்று.குமரி மாவட்ட மக்களில் பெரும்பாலோர் இம்மாவட்டத்தை மீண்டும் கேரளத்தோடு இணைத்தால் நல்லது என எண்ணும் அளவுக்குத் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் போக்கு இருக்கிறது.

குமரி மாவட்டம் பிறந்த நாளில் , கடந்த ஆண்டு நம் தளத்தில் வெளியான ஓர் ஆக்கத்தை மீண்டும் வாசகர்களின் நினைவுக்குத் தருகிறோம்.

அன்புடன்
நாஞ்சில் நாடு

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top