Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: வால்ட் டிஸ்னி - வரலாற்று நட்சத்திரங்கள் - Walt Disny history - Disny World - history heros
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
உலகில் அதிகமானோரை சிரிக்க வைத்த ஒரு நபர் யாரென்று கேட்டால் சார்லி சாப்ளின் என்று வரலாறு சொல்லும். உயிரோடு உலா வந்து உலக மக்களை சிரிக...

உலகில் அதிகமானோரை சிரிக்க வைத்த ஒரு நபர் யாரென்று கேட்டால் சார்லி சாப்ளின் என்று வரலாறு சொல்லும். உயிரோடு உலா வந்து உலக மக்களை சிரிக்க வைத்தவர் அவர். ஆனால் உயிரற்ற ஒன்று சார்லி சாப்ளினுக்கு இணையாக உலகை சிரிக்க வைத்திருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு தெரியாவிட்டாலும் உங்கள் பிள்ளைகளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். சுமார் 85 ஆண்டுகளுக்கு முன்பு கேலிச்சித்திர உலகில் அடியெடுத்து வைத்து கற்பனை உலகை கொடி கட்டி பறக்க வைத்த அந்த கதாபாத்திரம் மிக்கி மவுஸ் (Mickey Mouse). பெரியவர்களைகூட குழந்தைகளாக மாற்றி சிரிக்க வைத்த அந்த மந்திர கதாபாத்திரத்தை உலகுக்கு தந்தவர் வால்ட் டிஸ்னி (Walt Disney). பொழுதுபோக்கு என்ற பரந்து விரிந்த வானம் அவருக்கு வசப்பட்ட கதையை தெரிந்துகொள்வோம்.

1901-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் நாள் அமெரிக்காவின் Illinois மாநிலத்தில் பிறந்தார் வால்ட் டிஸ்னி. அவருக்கு சிறு வயதிலிருந்தே ஓவியங்கள் வரைவதிலும், தீட்டுவதிலும் ஆர்வம் இருந்தது. ஏழு வயதானபோதே அவர் ஓவியங்கள் வரைந்து அண்டை வீட்டுக்காரர்களிடம் விற்பார். பள்ளிப்பாடங்களை படிப்பதற்கு பதில் அவர் எப்போதுமே இயற்கை காட்சிகளையும், விலங்குகளையும் வரைந்துகொண்டிருப்பார். தந்தைக்கு அது பிடிக்கவில்லையென்றாலும், பிடித்த துறையைத் தேர்ந்தெடுக்குமாறு வால்ட் டிஸ்னிக்கு தாயார் ஊக்கமூட்டினார்.
  

சிக்காக்கோவின் மெக்கின்லி ( McKinley High School) உயர்நிலைப்பள்ளியில் ஓவியம் மற்றும் புகைப்படத்துறையில் படித்தார் வால்ட் டிஸ்னி. ஒரு நுண்கலைக்கழகத்தில் சேர்ந்து தனது ஓவியத்திறமையை வளர்த்துக்கொண்டார். தனக்கு மிகவும் விருப்பமான திரைப்பட நாயகன் சார்லி சாப்ளினைப்போல் டிஸ்னி பள்ளியில் நடித்துக்காட்டுவார். ஆசிரியர்கள் அவரை கதை சொல்லுமாறு கேட்டுக்கொள்வார்கள் அவர் கரும்பலகையில் ஓவியங்களாக வரைந்துகொண்டே கதை சொல்லுவார். தந்தைக்குத் தெரியாமல் இரவு நேரங்களில் உள்ளூர் அரங்குகளில் நகைச்சுவை நாடகங்களில் நடித்த அனுபவமும் அவருக்கு உண்டு.

1922-ஆம் ஆண்டு 21 வயதானபோது வால்ட் டிஸ்னி Laugh-O-Grams என்ற தனது முதல் நிறுவனத்தை சகோதரர் Roy-யுடன் சேர்ந்து தொடங்கினார். தனது மாமாவிடம் 500 டாலர் கடனாக பெற்று அந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். கேலிச்சித்திர படங்களை உருவாக்குவதில் சோதனை செய்து பார்த்த அவர் Alice in Cartoon land என்ற கார்ட்டூன் படத்தை தயாரித்தார் அது தோல்வியைத் தழுவியது நிறுவனமும் நொடித்துப் போனது. ஆனால் அந்த முதல் தோல்வி அவரை வருத்தவில்லை. மனம் தளராத வால்ட் டிஸ்னி அடுத்து Oswald the Lucky Rabbit என்ற புதிய கேலிச்சித்திரத்தை உருவாக்கினார். அது ஓரளவுக்கு சிறப்பாக அமைந்தாலும் அதன் உரிமையை இன்னொருவர் வாங்கிக்கொண்டு டிஸ்னியை ஏமாற்றினார். அப்போதும் மனம் தளராத டிஸ்னி தன் சகோதரர் ராயுடன் இனிமேல் நாம் சொந்தமாக தொழில் செய்வோம் நமக்கு கைகொடுக்கப் போவது ஓர் எலி. அது நமக்கே சொந்தமாக இருக்கும் என்று கூறினார்.

அப்போது உலகுக்கு அறிமுகமான அந்த அதிசய எலிதான் 'Mickey Mouse' முகம் இரண்டு காதுகள் என வெறும் மூன்று வட்டங்களால் உருவானது Mickey Mouse. பிறந்த ஓரிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே அது உலகப்புகழ் பெற்றது. வால்ட் டிஸ்னியின் பக்கம் ஹாலிவுட்டின் கவனம் திரும்பியது. மிக்கிக்கு உருவம் தந்த டிஸ்னிதான் அதற்கு குரலும் கொடுத்தார். அவர் அடுத்தடுத்து தயாரித்த Steamboat Willie, The Skeleton Dance போன்ற கேலிச்சித்திரங்களில் அந்த மிக்கி அடித்த லூட்டிகளையும் அதன் சேட்டைகளையும் இமை கொட்டாமல் மக்கள் பார்த்து ரசித்தனர், குழந்தைகள் கற்பனை வானில் சிறகடித்துப் பறந்தனர். பெரியவர்கள் மீண்டும் குழந்தைகளாகி தங்கள் கவலைகளை மறந்து சிரித்தனர்.
1932-ஆம் ஆண்டு டிஸ்னி உருவாக்கித்தந்த 'Flowers and Trees' என்ற திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. Mickey Mouse என்ற சுட்டி எலியை தந்த டிஸ்னி கேலிச்சித்திர உலகில் அடுத்து அறிமுகப்படுத்திய வெற்றி கதாபாத்திரம் 'Donald Duck' என்ற வாத்து. அந்த வாத்தும், எலியும் செய்த சேட்டைகளை எண்ணி இன்றும் தன்னை மறந்து சிரிப்பவர்கள் ஏராளம். 1937-ஆம் ஆண்டில் Snow White and the Seven Dwarfs என்ற முழுநீள கேலிச்சித்திரத்தை வழங்கினார் டிஸ்னி. அதற்கு அப்போது ஆன செலவு எவ்வுளவு தெரியுமா? ஒன்றரை மில்லியன் அமெரிக்க டாலர். அவ்வுளவு பொருட்செலவில் உருவான அந்தப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்தது.

அதன் பின்னர் Pinocchio, Fantasia, Dumbo, Bambi போன்ற புகழ்பெற்ற கேலிச்சித்திர படங்களை அவர் உருவாக்கினார். திரையில் மட்டுமே காட்ட முடிந்த கற்பனை உலகை நிஜமாக்கி காட்ட விரும்பிய டிஸ்னி 1955-ஆம் ஆண்டில் 17 மில்லியன் டாலர் செலவில் மிகப்பிரமாண்டமான 'Disneyland Park' என்ற பொழுதுபோக்குப் பூங்காவை அமெரிக்காவின் Oakland நகரில் உருவாக்கினார். Disneyland பூங்கா நிச்சயம் முதல் ஆண்டிலேயே நொடித்துப்போகும் என்று பலர் ஆரூடங்கள் கூறினர். ஆனால் பூங்காவை பார்க்க வந்தவர்களோ அதனை பூலோக சொர்க்கம் என்று வருணித்தனர். முதல் 25 ஆண்டுகளில் பல உலகத்தலைவர்கள் உட்பட 200 மில்லியன் பேர் கண்டு ரசித்தனர். தற்போது ஆண்டுக்கு சுமார் 15 மில்லியன் வருகையாளர்களை அது ஈர்க்கிறது.
  

ஒவ்வொரு குழந்தையும் சென்று பார்த்து வர விரும்பும் கனவுலகம் அது. டிஸ்னி சிறுவனாக இருந்த வயதில் பள்ளிக்குப் போகும் வழியில் ஒரு பூங்கா இருந்தது அதில் கட்டணம் செலுத்தினால்தான் விளையாட முடியும். டிஸ்னி அப்போது ஏழ்மையில் வாடியதால் ஒருமுறைகூட அவரால் அந்த பூங்காவில் விளையாட முடியவில்லை. அந்த ஏக்கம்தான் உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் பூங்காவை உருவாக்கும் எண்ணத்தை அவருக்குள் விதைத்திருக்க வேண்டும். இன்று கேலிச்சித்திரம் என்றால் நம் நினைவுக்கு வரும் முதல் பெயர் மிக்கி மவுஸ். அந்த அதிசய கதாபாத்திரம் எப்படி உருவானது? வால்ட் டிஸ்னியே ஒருமுறை அதைப்பற்றி கூறினார்....

"வாழ்க்கையில் என்ன செய்யப்போகிறோம்? என்று தெரியாமல், ஒரு பிடிப்பு இல்லாமல் எல்லாமே இழந்த நிலையில் ஒருமுறை Manhattan-லிருந்து Hollywood-டிற்கு இரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தேன். எப்போதும் போலவே அப்போதும் நான் கற்பனை உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தேன். அப்போது என் ஓவிய நோட்டுப்புத்தகத்தில் நான் கிறுக்கிய கதாபாத்திரம்தான் மிக்கி மவுஸ்."
  

கற்பனை என்ற சொல்லுக்கு புது அர்த்தம் கொடுத்த வால்ட் டிஸ்னி நோய்வாய்ப்பட்டு 1966-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் நாள் தமது 65-ஆவது வயதில் காலமானார். இறப்பதற்கு முதல் நாள்கூட அவர் பல புதிய எண்ணங்களை நிறைவேற்ற திட்டம் தீட்டிக்கொண்டிருந்ததாக கூறுகிறார் அவரது சகோதரர் ராய். வால்ட் டிஸ்னியின் சரித்திர வெற்றிக்கு காரணங்கள் என்ன? அவரே கூறுகிறார் இவ்வாறு.....


மனிதனுக்கு எட்டாத உயரம் என்று எதுவுமே கிடையாது அதற்கு கனவை நனவாக்கும் ரகசியம் தெரிந்திருக்க வேண்டும். அந்த ரகசியம் நான்கு C எழுத்துகளில் அடங்கியிருக்கிறது. Curiosity, Confidence, Courage, Constancy அதாவது ஆர்வம், தன்னம்பிக்கை, தைரியம், நிலைப்பாடு இந்த நான்கிலும் ஆக முக்கியமானது தன்னம்பிக்கைதான். நீங்கள் ஒன்றை நம்பினால் அதனை உளப்பூர்வமாக எந்த கேள்விக்கும் இடம் தராமல் நம்புங்கள் அதுதான் வெற்றியின் ரகசியம். வால்ட் டிஸ்னிற்கு வெற்றியைத் தந்த அந்த நான்கு C மந்திரம் நிச்சயம் நமக்கும் பொருந்தும். டிஸ்னியைப்போல் ஆர்வம், தன்னம்பிக்கை, தைரியம், நிலைப்பாடு ஆகியவற்றுடன் விடாமுயற்சியோடு செயல்பட்டால் வால்ட் டிஸ்னிற்கு கற்பனை என்ற வானம் வசப்பட்டதைப்போல நமக்கும் நாம் விரும்பும் வானம் நிச்சயம் வசப்படும்.



About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top